அனைத்து காமிக்ஸ் ரசிகர்களுக்கும் எனது நன்றிகளையும் மரியாதை கலந்த வணக்கங்களையும் தெரிவித்து கொள்ளுகிறேன். என்னுடைய முதல் பதிவில் இருந்த உண்மைகளை நீங்கள் உணர்ந்து இருப்பீர்கள். எனக்கு வந்த பல மின்னஞ்சல்களில் வாசக அன்பர்கள் முத்து காமிக்ஸ், லயன் காமிக்ஸ் போன்ற காமிக்ஸ்'களின் முகமூடியை கிழிக்குமாறு கேட்டு கொண்டனர். அதன் விளைவே இந்த பதிவு. என்னுடைய முதல் பதிவில் பின்னுட்டம் இட்ட அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றி.
நிற்க.
சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த அவர்கள் நடிப்பில் வெளிவந்த "மன்னன்" என்ற திரைப் படத்தை நம்மில் பலருக்கு நினைவிருக்கும். அந்த படத்தை தெலுங்கு மொழியில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி அவர்கள் நடிப்பில் "காரானா மொகுடு" என்ற பெயரில் தெலுங்கில் பெரும் வெற்றி பெற்றது. அந்த திரைப்படத்தில் நக்மா மற்றும் வாணி என்ற இரண்டு குடும்ப குத்து விளக்குகளின் "திறமை" முழுவதுமாக வெளிப் பட்டது. அதனால் அந்த படம் தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்டு "அர்ஜுன்" என்ற பெயரில் வெளிவந்தது. வந்தாரை வாழ வைக்கும் தமிழன் நக்மாவில் திறமையில் மயங்கி இந்த படத்தையும் வெற்றி பெற வைத்தான். அதாவது, தமிழில் வெளிவந்த ஒரு படத்தின் தமிழாக்கத்தையும் நாம் வெற்றி பெற வைப்போம்.
தொடர்க.
சென்ற பதிவில் நான் குறிப்பிட்டதை போலவே நமது தமிழ் நாட்டு சித்திர கதைகளை மைய்யமாக கொண்டே பல காமிக்ஸ் கதைகள் வெளிவந்தன என்பது மறுக்க முடியாத உண்மை. இப்போது நான் கூறப் போகும் செய்தியால் நெடுநாள் முத்து காமிக்ஸ் ரசிகர்களாகிய முத்து விசிறி, காமிக்ஸ் டாக்டர், கிங் விஸ்வா போன்றவர்கள் அதிர்ச்சி அடையலாம்.
ஆனாலும் உண்மை என்பதை அவர்களும் அறிந்து கொள்ளட்டும். முத்து காமிக்ஸ்'இல் வந்த பெய்ருட்டில் ஜானி என்ற கதையை உங்களில் பலருக்கு நினைவிருக்கும். ஆனால் அந்த கதையின் ஆதாரம் என்ன? என்று எப்போதாவது நீங்கள் யோசித்து உண்டா? அந்த கதையின் ஆதாரமே இந்த பதிவில் நான் இடப் போகும் வாசு காமிக்ஸ் என்ற தமிழக சித்திரக்கதை பொக்கிஷமே என்பதை நீங்கள் அறிய வேண்டும்.
இதை தவிர முன்னாள் தமிழக முதலமைச்சர் அறிஞர் அண்ணா அவர்கள் எழுதிய (மிகவும் புகழ் பெற்ற ஓர் இரவு, வேலைக்காரி) போன்ற கதைகளின் முன்னோடி என்ன என்பதையும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். ஏனென்றால் நான் மேலே குறிப்பிட்ட வாசு காமிக்ஸ் அவ்வளவு சிறப்பான வரலாறு பெற்றது. சென்னை ராயப்பேட்டையில் இருந்து வெளிவந்த வாசு காமிக்ஸ் இதழின் கதைகளை இங்கிலாந்து நாட்டில் இருந்து வெளிவந்த ப்ளீட்வே என்ற நிறுவனம் காப்பி அடித்தது. அதன் கதைகளை சிவகாசியில் இருந்து வெளிவந்த முத்து காமிக்ஸ் தமிழில் மொழி பெயர்த்து வெளி இட்டது.
அதாவது, தமிழில் வெளிவந்த "மாயாவியும் மந்திரவாதியும்" என்ற கதையை இங்கிலாந்து ப்ளீட்வே நிறுவனம் ஆங்கிலத்தில் வெளி இட, அதனை தான் முத்து காமிக்ஸ் மொழி பெயர்த்து வெளிஇட்டது. ஆங்கிலேய மோகம் பிடித்து அலையும் நாம் "ஆஹா, ஒஹோ" என்று இதையும் பாராட்டுகிறோம். மேலே நான் கூறிய "மன்னன்" படமும் "அர்ஜுன்" படமும் இப்போது உங்களுக்கு விளங்கும் என்று நம்புகிறேன். இன்னமும் இதனை நம்பாத சில வாசகர்கள் இருக்க கூடும். அவர்களுக்கே இந்த பதிவு. இது மட்டும்மில்லை. வாசு காமிக்ஸ் இதழின் ஓவியர் துளசி அவர்களின் சித்திர தரம் எப்படி பட்டது என்றால், மும்பையில் இருந்து வெளிவந்த அமர் சித்திரக் கதை என்ற கதை வரிசையில் வெளி வந்த படங்கள் கூட இந்த கதையை அடிப்படையாக கொண்டு வந்தவையே ஆகும்.
என்னடா இவன்? முதலில் ஜானி நீரோ கதையை காப்பி என்றான், பிறகு அறிஞர் அண்ணாவின் கதைகளையும் கூறினான், இப்போது அமர் சித்திர கதைகளையும் கூறுகின்றானே என்று நீங்கள் வியக்கலாம். தொடந்து படியுங்கள். உங்களுக்கே உண்மை விளங்கும்.
சில வாசகர்கள் மட்டும் என்னடா இந்த அட்டைப் படத்திற்கும் கதைக்கும் சம்பந்தமே இல்லையே? என்று வினவலாம். ஆழ்ந்து யோசித்தால் இந்த ஒரு யுத்தியையும் நமது லயன் மற்றும் முத்து காமிக்ஸ் இதழ்களில் காப்பி அடித்து இருப்பார்கள். உதாரணத்திற்கு முத்து காமிக்ஸ் இதழ் எண் 305'ல் வெளிவந்த "கதை சொல்லும் கொலைகள்" இதழின் அட்டையை பாருங்கள். கதைக்கும் அட்டைக்கும் சம்பந்தமே இல்லாமல் இருக்கும், இந்த மாயாவியும் மந்திரவாதியும் அட்டையை போல.
இப்போது கதைக்கு போகலாம்: முதல் பக்கத்தை பாருங்கள். இதில் தான் கதையின் இரண்டு வில்லன்கள் அறிமுகம் ஆகிறார்கள். கதாசிரியர் அவர்கள் இருவரையும் எப்படி புலி மற்றும் நரியின் கூட்டணி என்று கூறி படிக்கும் ஆர்வத்தை தூண்டுகிறார் என்பதை கவனியுங்கள். இதில் குண்டப்பா என்பவர் தான் மந்திரவாதி ஆவார். ஏன் இதனை குறிப்பிடுகிறேன் என்றால் சில நேரங்களில் லயன் மற்றும் முத்து காமிக்ஸ்'களில் வரும் கதைகளின் பெயரும் கதையும் தொடர்பில்லாமல் இருக்கும். ஆனால் இந்த கதை அப்படி பட்டது இல்லை என்பதை நீங்கள் கவனிக்க வேண்டும். இப்போது மந்திரவாதி வந்து விட்டார், பின்னாலேயே மாயாவியும் வருவார்.அதனால், கதையும் தலைப்பும் தொடர்பு உடையது என்பதை கதையின் முதல் பக்கத்திலேயே தெரிவித்தது விட்டோம். விட்டது ஒரு தொல்லை. இந்த கதையின் ஆசிரியர் திரு துளசி அவர்களை சற்று கூர்ந்து கவனித்து உங்களுடைய நியாபகத்தில் வைத்து கொள்ளுங்கள். ஏன் என்றால் இவர் அகில உலக புகழ் பெற்ற ஒரு நபர் ஆவார். அமெரிக்காவில் உள்ள ட்வின் டவர்ஸ் தாக்குதலுக்கு ஆளானபோது BBC, CNN என பல உலக தொலைக்காட்சிகள் இவரைத்தான் தொடர்பு கொண்டன. எனேன்றால் இவர் தான் இந்தியாவின் Nostradamus என்று அழைக்கபடுபவர்.
கதையில் வரும் முக்கிய பாத்திரம் இந்த மன்னார்சாமி ஆகும். எலுமிச்சம் பழத் தோட்ட்டத்தை விற்று சினிமா கதாசிரியர் ஆகும் ஆசையில் இருக்கும் இவருக்கு பொன் சிலை போன்ற அழகான இரண்டு பெண்கள்: முறையே சுமதி மற்றும் கலா ஆகும். இந்த கலாவை பலரும் ரசித்து "கலா-ரசிகர்கள்' என்றும் கூறிக் கொண்டனர். இந்த மன்னர்சமியை சந்திக்கும் இரண்டு வில்லன்களும் அவரிடம் தாங்கள் சினிமா தயாரிப்பாளர்கள் என்று கூறி அவரின் பணத்தையும், தோட்டத்தையும் காணாமல் போகச் செய்தனர்.
இந்த படத்தில் மன்னார்சாமி எப்படி உட்கார்ந்து இருக்கிறார் என்பதை கவனியுங்கள். இது தான் ஜப்பானிய "இகிடோ - ஹட்சுமி" என்ற மனக் கட்டுப்பாட்டு கலையின் அடிப்படை ஆகும். இந்த "இகிடோ - ஹட்சுமி" பற்றி வேறு விபரங்கள் வேண்டும் என்றால் நமது காமிக்ஸ் டாக்டரை கேளுங்கள். தமிழ்வாணன் அவர்கள் எழுதிய "டோக்கியோ ரோஜா" என்ற கதையிலும் கூட இந்த "இகிடோ - ஹட்சுமி" கலையை சங்கர்லால் பின்பற்றுவதை வாசகர்கள் நினைவு கூறலாம்.
பின்னர் மன்னார்சாமி இரண்டு வில்லன்களிடமும் கடன் வாங்கும் நிலைக்கு ஆளாகிறார். தென் தமிழகத்தின் மிகப் பெரிய எலுமிச்சை தோட்ட அதிபர் இப்படி கடன் வாங்குவது பலருக்கு அதிர்ச்சியை தந்தாலும், அப்போதே இந்த Economic slow down பற்றி ஆசிரியர் எழுதி இருக்கிறார் என்பது நமக்கு தெரிகிறது. இது போன்ற பல சம்பவங்களை நமக்கு முன்னரே தெரிவித்ததால் தான் இந்த கதாசிரியர் துளசியை தமிழகத்தின் Nostradamus என்று பல அறிவியல் அறிஞர்கள் கூறுவர். இதே கதாசிரியர்தான் தமிழகத்தில் மின்சார தட்டுப் பாடு வரும் என்பதை தன்னுடைய "நாட்டுப்புற மாயாவி" என்ற கதையில் மிக அழகாக கூறி இருப்பார்.
ஆனால், அப்போது தான் விதி அவள் வாழ்க்கையில் விளையாடுகிறது. விதி வலியது என்பது நம்மில் பலருக்கும் தெரியும்: ஆனால் விதி கொடியது என்பதை இப்போது தெரிந்து கொள்ளுங்கள். பெருமழைக்கு ஒரு மரத்தடியில் ஒதுங்கும் சுமதியை ஒரு நாகம் தீண்டிவிடுகிறது. அவள் அந்த நொடியிலேயே உயிர் துறக்கிறாள்.
அவளை பின் தொடந்து வந்த ஒரு மர்ம உருவம் அவளிடம் இருந்த ரூபாய் ஐந்தாயிரத்தை எடுத்து கொண்டு சென்று விடுகிறது. இப்படியாக விதியின் சதியால் சுமதி பணத்தை கொடுத்து கடனை அடைக்க முடியாமல் இறந்ததால் மன்னர் சாமி தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொள்ளுகிறார்
அதனால் மிகுந்த வருத்தமுற்ற கலா தன்னுடைய பெயரை துர்கா என்று மாற்றி கொண்டு தன்னுடைய குடும்பத்தை சீர்குலைத்தவர்களை பழி வாங்க சபதம் பூண்டாள். அதனால் அவள் மருதன் வீட்டிலேயே வேலைக்கு செல்கிறாள். அப்போது மாயாவி அங்கு வருகிறார். (அப்பாட, ஒரு வழியாக கதைக்கும் தலைப்புக்கும் சம்பந்தம் உண்டு என்பதை நாம் நிரூபித்து விட்டோம் - அதுவும் பதினான்காம் பக்கத்திலேயே).
இவர் யார்? இவருக்கு ஏன் மாயாவி என்று பெயர் வந்தது? இது போன்ற பல கேள்விகள் உங்கள் மனதில் எழுந்தாலும் அதை கட்டுப்படுத்தி கொண்டு படியுங்கள் (கதையை முழுவதுமா படித்த எனக்கே புரியல. பதினாலு பக்கம் படிச்ச இவருக்கு புரியணுமாம் = ஆசை, தோசை அப்பளம் வடை). மாயாவி துர்காவாகிய கலாவுக்கு உதவி செய்வதாக கூறி விடை பெறுகிறார்.
வேலைக்காரி: பிறகு இரண்டு கயவர்களில் ஒருவராகிய குண்டப்பா அங்கு வருகிறார். அவர் ஒரு பெண் பித்தன் என்பது தெரிந்தாலும் கடமையே கண்ணாக கொண்ட துர்கா தன்னுடைய சேலை விலகி இருப்பதை உணராமல் இருக்கிறாள். இந்த சம்பவங்களை அடிப்படையாக கொண்டே "வேலைக்காரி" உருவானதாக பலர் கூறுவர்.
பின்னர் தனனுடைய குடும்பத்தை நடுத்த் தெருவிற்கு கொண்டு வந்த இரண்டு கயவர்களில் ஒருவனை (குண்டப்பா) துர்கா கொன்று விடுகிறாள். மற்றும் ஒரு காமக் கொடூரன் ஆகிய வட இந்திய சேட் ஒருவனையும் துர்கா கொள்கிறாள். கடைசியாக மருதனை கொல்ல முயலும்போது மருதன் உன்மயை தெரிந்து கொள்ளுகிறார். மருதன் தனனுடைய துப்பாக்கியால் துர்காவை கொல்ல முயலும்போது மருதனின் முதல் தாரத்தின் மகனாகிய சேகர் அங்கு வந்து தோட்டாவை தான் வாங்கி கொள்கிறார். அதனால் கோபமுற்ற மருதன் சேகரை தூணில் கட்டி வைக்கிறார்.
அப்போது அருகில் இருந்த அறையில் இருந்த டி.வீ.யில் ஒரு படம் வந்தது. இந்த காட்சியை காணுங்கள். இதில் இருந்து தான் அமர் சித்திர கதைகள் உருவாகியது என்பதற்கு இரு வேறு கருத்து இருக்க முடியுமா?
உலகப் புகழ் பெற்ற பஞ்ச தந்திர கதைகள் உருவான அடிப்படை இந்த காக்கா-குஞ்சு கதை தான் என்று நான் சொல்ல மாட்டேன். ஏன் என்றால் அதன் அடிப்படை என்ன என்பது எனக்கு தெரியும். அப்போது சேட்'இன் தங்கம் இருக்கும் பெட்டியுடன் ஓட நினைக்கும் மருதனை மாயாவி வழி மறிக்கிறார். இந்த சண்டை காட்சியை பாருங்கள். பெய்ருட்டில் ஜானி என்ற முத்து காமிக்ஸ் புத்தகத்தில் இருந்தும் இரண்டு பக்கங்களை இங்கு ஸ்கான் செய்து உங்களின் பார்வைக்கு அளித்து உள்ளேன். ஒரு பானை சோற்றுக்கு ஓரு சோறு பதம் என்பது போல ஒரு காமிக்ஸ் காப்பி அடிக்கும் என்பதிற்கு இரண்டு பக்கங்களே போதும்.
இந்த சண்டை காட்சிகளை கண்டு வியந்த இயக்குனர் ஷங்கர் இது போன்ற ஓரு சண்டை கட்சியை தன்னுடைய இயந்திரன் படத்தில் வைத்து இருப்பதாக தகவல். நண்பர் கேபிள் ஷங்கர் அவர்களிடம் இதைப் பற்றி உறுதி செய்ய வேண்டும்.
ஓரு வழியாக தீமை அழிந்து நன்மை வாழ்வதாக இந்த கதை முடிகிறது. ஆனால் இந்த கதையுடன் பல தொடர்புகள் இன்றைய சமூக வாழ்க்கைக்கு இருப்பதாக நான் நினைக்கிறேன். உங்கள் கருத்துக்களை எனக்கு என் நீங்கள் பின்னுட்டமாக பதிய கூடாது?
காமிக்ஸ் டாக்டர் தன்னுடைய வலைப்பூவில் ஏதோ பெரிதாக முத்து காமிக்ஸ் மாயவியிடம் இருந்து கடிதம் இருப்பதை கூறினார். ஆனால் அதன் அடிப்படை என்ன என்பதை இங்கு நீங்கள் பாருங்கள்.
நம்முடைய கிங் விஸ்வா, ரபிக் ராஜ போன்றவர்கள் தங்களுடைய வலைப் பூவில் சும்மா அடுத்த பதிவு இது என்று போட்டு நம்ம உயிரை எடுக்கிறார்கள். அதனால் தான் நானும் இப்படி ஓரு உத்தியை கொண்டு வந்து இருக்கிறேன். இந்த ஒன்பது கதையில் எந்த காவியத்தை அடுத்த பதிவாக போட வேண்டும் என்பதை நீங்கள் எனக்கு வோட்டு அளித்து தெரிவியுங்களேன்? ஆனால் டாக்டரின் ஆவி என்ற கதை பலரின் கவனத்தை கவரும் என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை.
இந்த டார்ஜான், டார்ஜான் என்று பலர் கூறுவார்களே, அந்த டார்ஜானின் பிறப்பிடம் இந்த கருமலை தீவு என்ற கதையே ஆகும். மேலும் முத்து விசிறி அவர்கள் பதிவிட்ட கொலைகார கலைஞன் என்ற கதையின் மூலம் இந்த கோமாளியின் கொலைகள் தான் என்பதை என்பதை நான் சொல்லவும் வேண்டுமோ?
உறைபனி மர்மம் என்ற கதையில் நமது இரும்புக்கை மாயாவி தோன்றுவார். அந்த கதையின் மூலம் இந்த பனித்தீவில் மாயாவி என்ற கதை ஆகும். இதை பற்றி நமது முத்து விசிறி தனது அடுத்த பதிவில் விரிவாக எழுதலாமே?
மெக்சிகோ மாயாவி என்ற கதை ஆங்கிலத்தில் வந்து விட்டது. நம்முடைய முத்து காமிக்ஸ் தான் அதனை தமிழில் வெளி இட வில்லை. அதைப் போல பழைய முத்து காமிக்ஸ் வாசகர்கள் முகமூடி வீரர் வேதாளன் தோன்றும் "முத்திரை மோதிரம்" என்ற கதையே மோதிர விரல் என்று கீழே உள்ள கதை என்பதை உணரலாம்.
உங்களின் விமர்சனங்களை எனக்கு என் நீங்கள் பின்னுட்டமாக இட கூடாது?
நன்றியுடன்,
ஒலக காமிக்ஸ் ரசிகன்.